சென்னை: ‘ரோஜாவனம்’, ‘ஆனந்தம்’, ‘ரோஜாக்கூட்டம்’ உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்தவர், ஜெய் ஆகாஷ். ‘ஆயுதப்போராட்டம்’, ‘ஜெய் விஜயம்’ உள்பட தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களை இயக்கி நடித்துள்ள அவர், தற்போது தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், ‘மாமரம்’. கிகி வாலஸ், ‘காதல்’ சுகுமார், பிரம்மானந்தம், ராகுல் தேவ் நடித்துள்ளனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு நந்தா இசை அமைத்துள்ளார். சதீஷ் குமார் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜெய் ஆகாஷ் பேசுகையில், ‘இப்படம் எனது சொந்த காதல் கதை. உயிருக்குயிராக காதலித்த என் காதலி, என்னைவிட பணமும், புகழும் வாய்ந்த ஒருவர் கிடைத்ததும் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார். அவரது நினைவாக 12 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டின் முன்பு ஒரு மாஞ்செடி நட்டேன். இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மரம் வளரும்போது இப்படத்தை உருவாக்கி முடித்தேன். இப்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு படம் திரைக்கு வருகிறது’ என்றார்.