சென்னை: இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வழங்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்ட படம், ‘அநீதி’. தெலுங்குப் பதிப்புக்கு ‘பிளட் அன்ட் சாக்லெட்’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இயக்குனர் எஸ்.கே.ஜீவா வசனம் எழுதியுள்ளார். வரும் 21ம் தேதி இருமொழிகளிலும் திரைக்கு வரும் இப்படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன் கூறியதாவது: ‘வல்லான் வகுத்ததுதான் நீதி, எளியோருக்கு அநீதி’ என்ற இந்த காலக்கட்டத்தில், நீதியை உரக்கச் சொல்வதற்காகவே ‘அநீதி’ படம் உருவாகியுள்ளது. நீதி கிடைக்காத மனிதர்களின் குரலாக இந்தப் படம் ஒலிக்கும். எளிய மனிதர்களுடைய வாழ்க்கையையும் பிரதிபலிக்கும்.
மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சி செய்துள்ளேன். எனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தயாரிக்கிறேன். இயக்குனர் ஷங்கர் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பு அளித்தார். இப்போது நான் தயாரித்துள்ள ‘அநீதி’ படம் பற்றி அவரிடம் சொன்னபோது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிட முன்வந்தார். கதையின் நாயகனாக நடித்துள்ள அர்ஜூன் தாஸ், ஷாருக்கான் போல் வருவார் என்று சொல்கிறார்கள். உண்மையிலேயே அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. இப்படத்தை எந்தவிதமான சமரசமும் இல்லாமல் உருவாக்கியுள்ளோம்.