மும்பை: மருத்துவர்கள் கூறிய அறிவுரையின்படி எனது தாய் கருக்கலைப்பு செய்திருந்தால், நான் இன்று இருந்திருக்க மாட்டேன் என்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, சமீபத்தில் நடந்த நேர்காணலில் அளித்த பேட்டியில், ‘எனது தாய் சுனந்தா கர்ப்பமாக இருந்தபோது, மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டார். எனது தாயாரின் கர்ப்பத்தில் நான் இருந்தேன். அந்த கருவை கலைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் எனது தாய், அந்த கருவை கலைக்கவில்லை. எனது தாயாருக்கு கருச்சிதைவு ஏற்படும் என்று அனைவரும் நினைத்தனர்.
இருப்பினும், ஷில்பாவாக நான் என் தாயாருக்கு பிறந்தேன். என் தாய் தனது கருவை கலைத்திருந்தால், இன்று நான் இருந்திருக்க மாட்டேன். என் தாயால் நான் இன்று உயிருடன் உள்ளேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக இந்த உலகிற்கு நான் வந்துள்ளதாக உணர்கிறேன். திரைப்படங்கள் எனது வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளன. வாழ்க்கையில் பலவற்றைச் சந்திக்கும் மக்களுக்கு நான் உத்வேகம் அளிப்பவளாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.