புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் ₹200 கோடி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ₹10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத் துறை மேற்கண்ட வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்து அவ்வப்போது சுகேஷ் கடிதங்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு மின்னஞ்சல் மூலம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பரபரப்பு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘ சிறையில் அமர்ந்து, வெளிப்படையாக என்னை மிரட்டும் சுகேஷூக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அவர் எழுதும் கடிதங்கள், எனது தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.