ஐதராபாத்: சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படத்துக்கு பிறகு கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இதில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். சைப் அலிகான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரட்டலா சிவா, டிவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், ‘தேவாரா’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது. இது மறந்துப்போன கடற்பகுதி குறித்துத் பேசும் படம். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அழுத்தமாக இருக்கும். கதை சொல்லலில் நேரம் தேவைப்படுவதால், இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.