சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ 1 மற்றும் 2ம் பாகத்தில் அருண்மொழி வர்மனாக நடித்திருந்த ஜெயம் ரவி, தற்போது பல படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு, இப்போது அவரது 2 படங்களில் நடித்த பிறகு நிறைவேறியது. பிரமாண்டமான ‘பொன்னியின் செல் வன்’ முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்துவிட்டு, அதைவிட குறைந்த பட்ஜெட் படங்களில் நடிக்கும்போது என் மனநிலை எப்படி இருக்கும் என்று சிலர் கேட்கின்றனர். பிரியாணியே சாப்பிட்டாலும், இட்லியையும் சாப்பிடத்தானே செய்வோம். இரண்டுமே உணவுதான். எனக்கு நடிப்புப் பசி அதிகம். இப்போது எனக்கு பொறுப்பு கூடியிருக்கிறது.
முன்பு போல் சாக்லெட்பாயாக நடிக்க முடியாது. என் வயது, தோற்றம் போன்றவற்றை மனதில் கொண்டுதான் என் கேரக்டர் தேர்வு இருக்கும். முன்பு நான் நடித்த ரோல் எதுவும் திரும்ப வந்துவிடாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நடிக்கும் படங்கள் எல்லாம் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. நான் படம் இயக்குவது உறுதியாகி விட்டது. நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அதில் ஒரு கதையின் ஒன்லைனை மணிரத்னத்திடம் சொன்னபோது, ‘நன்றாக இருக்கிறது. நீ தைரியமாக படம் இயக்கு’ என்றார். இதுகுறித்து நானும், கார்த்தியும் நிறைய பேசி வருகிறோம். கார்த்தியிடம் ஒரு கதையைச் சொன்னேன். அவரும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வம்இருப்பதாக தெரிவித்துள்ளார்.