தமிழில் சரண் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘ஜெமினி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், கிரண். தற்போது அவருக்கு 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அவர், தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலும் நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான பிறகு இந்தியில் நடிக்கச் சென்றேன். அங்கு எனக்கு சரியான வரவேற்பு இல்லாததால், மீண்டும் சென்னைக்கே திரும்பி விட்டேன். இந்தியில் ஒரேயடியாக என்னை நிராகரித்து விட்டனர்.
அப்போது நடிப்பை விட்டு விலகி, ஏதாவது வியாபாரம் செய்யலாமா என்று யோசித்தேன். 4 வருடங்கள் ஒருவரைக் காதலித்து, பிறகு அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்ததும் காதலை முறித்துவிட்டேன். இப்போது எல்லாப் பிரச்னையும் தீர்ந்துவிட்டது. என்னைத்தேடி புதுப்பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை’ என்றார்.