லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான சர்வதேச விருதுதான் கிராமி விருது. 66வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவனின் சக்தி இசைக் குழுவுக்கு கிராமி விருது கிடைத்தது. இதே விழாவில் அமெரிக்காவின் ராப் இசைப் பாடகரான ஜய் இசட்டுக்கும் விருது அளிக்கப்பட்டது. அவருக்கு இசைத்துறையில் அவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் கிராமி இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.
விருது கிடைத்த பிறகு அரங்கத்திற்கு வெளியே வந்த ஜய் இசட், திடீரென விருதுக்கான கோப்பையில் மதுவை ஊற்றி குடித்தார். தன்னுடன் இருந்த சிலருக்கும் மது ஊற்றிக் கொடுத்தார். இது அவர் அதிக மகிழ்ச்சியின் காரணமாக செய்தார் என அவரது ரசிகர்கள் கூறினாலும் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து வருகிறார்கள். உயர்ந்த கிராமி விருதை இதுபோல் தரம் தாழ்த்த ஜய்க்கு எப்படி தோன்றியது? என்றும் விருதால் கவுரவிக்கும்போது அந்த விருதை கவுரவமாக நினைக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.