சென்னை: தான் நடிக்க இருந்த படத்தை பஹத் பாசிலுக்கு விட்டுக் கொடுத்துள்ளார் நிவின் பாலி. மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக பஹத் பாசில், நிவின் பாலி உள்ளனர். இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன், திரைப்பட இயக்குனராக இருக்கிறார். இவர் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் ேகரளாவில் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசில் நடிப்பதற்கு நிவின் பாலிதான் காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாச்சுவும் அற்புத விளக்கும் படத்தின் கதையை நிவின் பாலியை சந்தித்துதான் அகில் சத்யன் கூறியிருக்கிறார். நிவின் பாலிக்கு கதை பிடித்துவிட்டது. ஆனால் அந்த சமயத்தில் துறமுகம், படவேட்டு மலையாள படங்களில் அவர் நடித்து வந்தார். இதனால் சில மாதங்கள் காத்திருக்கும்படி அவர் அகில் சத்யனிடம் கூறியிருக்கிறார். இதற்கிடையில் வேறொருவர் மூலம் இந்த படத்தின் கதையை பற்றி பஹத் பாசில் கேள்விப்பட்டிருக்கிறார். தொடர்ந்து கனமான கதை கொண்ட படங்களிலே நடித்து வரும் பஹத் பாசில், இது முழுநீள காமெடி படம் என்பதால், இதில் நடிக்க விரும்பியுள்ளார். இது பற்றி அகில் சத்யனிடம் பேசியிருக்கிறார். உடனே அகில் சத்யன், நிவின் பாலியிடம் தகவல் கூறினாராம். அப்போது பெருந்தன்மையுடன் இந்த படத்தை பஹத் பாசிலுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் நிவின் பாலி. இந்த விஷயத்தை இப்போதுதான் ஒரு நிகழ்ச்சியில் அகில் வெளிப்படுத்தினார்.