திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான பார்வதி, கன்னடம் மற்றும் ஆங்கிலம், இந்தியிலும் நடித்துள்ளார். தமிழில் ‘பூ’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’, ‘உத்தம வில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். தற்ேபாது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். அவர் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் குழுவில் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில், சமீபகாலமாக அவர் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு புதுப்பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், மலையாள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் உள்பட சில நடிகர்களுக்கு எதிராகவும் கருத்துகள் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால், பார்வதியை திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் குழு பொறுப்பில் இருந்து நீக்கக்கோரி மலையாள நடிகர், நடிகைகள் பலர் வலியுறுத்தினர். அந்தப் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை அப்பொறுப்பில் இருந்து உடனே நீக்கும்படியும் கேரள அரசுக்கு பார்வதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் குழுவில் இருந்து பார்வதியை கேரள அரசு நீக்கியுள்ளது. முன்னதாக, கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் வாரிய உறுப்பினர்கள் சங்கர் மோகன், நடிகை மாலா பார்வதி ஆகியோர் கடந்த மாதம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.