சென்னை: போர் விமானி அபிநந்தனை 2019ம் ஆண்டு நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. பின்னர் பல்வேறு உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, ‘ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ என்ற பெயரில் வெப் தொடர் உருவாகியுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இதில் பிரசன்னா, ஜிம்மி ஷெர்கில், அஷுதோஷ் ராணா, ஆசிஷ் வித்யார்த்தி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியோ சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ம் தேதி வெளியானது. இதில் போர் விமானி அபிநந்தனாக, பிரசன்னா நடித்துள்ளார்.
வரவேற்பைப் பெற்று வரும் இத்தொடரில் நடித்தது பற்றி பிரசன்னா கூறியதாவது: நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவான வெப் தொடரில் நடித்ததில் மகிழ்ச்சி. அதோடு அபிநந்தன் கேரக்டரில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். வெளியில் தெரிந்த செய்திகளை விடவும் தெரியாத உண்மைச் சம்பவங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. ரஷ்யாவில் இருந்து நாம் வாங்கிய விமானம், மிக்-21. பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானம் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட நவீன விமானம். நம் மிக் மூலம் அந்த விமானத்தைத் தாக்கியதை அமெரிக்காவே முதலில் நம்ப மறுத்தது. அது தொடர்பாக நடந்த சம்பவங்கள் உட்பட பல விஷயங்கள் இத்தொடரில் புதுமையாக இருக்கும் என்றார்.