சென்னை: சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. கார்த்திக் யோகி இயக்கி உள்ள இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சந்தானம் பேசியதாவது: என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை.
ஆனால், அந்தக் கதையை நம்பி எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாசுக்கும். இந்த கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி தயாரிக்க முன் வந்தார்கள். எனக்கு இதுதான் முதல் பெரிய பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. தலைப்பில் ராமசாமி என்ற பெயர் எப்படி வந்தது என்றால், நானும், இயக்குநரும் கவுண்டமணியின் ரசிகர்கள்.
‘டிக்கிலோனா’ கவுண்டமணியின் டயலாக். அப்படித்தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்பதும் கவுண்டமணியின் வசனம்தான். நான் சினிமாவுக்கு வந்த நோக்கம் மக்களாகிய உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதானே தவிர, மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும், தாக்கி பேச வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. காசு, பணத்தை நோக்கி போக நினைத்திருந்தால் காமெடியனாகவே இருந்திருப்பேன், புதிது புதிதாக மக்களுக்கு கொடுத்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து அப்படியான படங்களை தந்து கொண்டிருக்கிறேன். என்றார்.