சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப், ராதிகா, காயத்ரி, ராதிகா ஆப்தே உள்பட பலர் இந்தி மற்றும் தமிழில் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்னை வந்திருந்த கேத்ரினா கைஃப், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை எனக்கு புதிது இல்லை. எனது 2வது தாய்வீடு இது. கடந்த 9 ஆண்டுகளாக இங்கிருந்தபடியே தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன்.
தற்போது மதுரையில் பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். இப்போதுதான் தமிழ் படத்தில் நடித்துள்ளேன். இதுவரை தமிழில் நடிக்காதது ஏன் என்று கேட்கின்றனர். நான் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது இல்லை. எது அமைகிறதோ அதை மட்டும் செய்வேன். நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்ததால் நடித்தேன்.
இனி தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா என்று கேட்டால், அதற்காக திட்டமிடவும் மாட்டேன்; சிரமப்படவும் மாட்டேன். ஆனால், நல்ல வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். என்னுடன் விஜய் சேதுபதி நடிப்பதாக சொன்னபோது, எனக்கு எந்த ஆச்சரிய மும் இல்லை. அதை நான் ரொம்ப இயல்பாகவே எடுத்துக்கொண்டேன். அவர் நடித்த ‘96’ படம் பார்த்ததால், அவரது திறமைகளைப் பற்றி தெரியும். ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தில் நாங்கள் நடித்தபோது, பல காட்சிகள் குறித்து நிறைய விவாதித்து ஒத்திகை பார்த்த பிறகே நடித்தோம்.