சென்னை: ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் தேசிய குத்துச்சண்டை வீராங்கனை. இந்தியாவிற்காக பல போட்டியில் கலந்துகொண்டு விளையாடி இருக்கிறார். இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்தார். அதன்பிறகு இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது தோழி மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் மீது, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். அவருக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர். இதனால் அவர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது நடந்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளரும், உத்தரபிரதேச மல்யுத்த சங்க துணைத் தலைவருமான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். இது மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ‘‘மல்யுத்தத்திலிருந்து விலகுகிறேன்” என்று அறிவித்தது விளையாட்டு துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங், சாக்ஷி மாலிக்கின் விலகல் முடிவு குறித்தும் அவருக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில் ‘‘சாக்ஷி மாலிக்கை இப்படி ஒரு நிலைமையில் பார்ப்பது இதயத்தை உடைக்கிறது. ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்த சாக்ஷி மாலிக் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பினையும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் கைவிட்டு ‘நான் விலகுகிறேன்’ எனக் கூறியிருப்பது மிகப்பெரிய பேரழிவு. தற்போதும், போராட்டத்தின் போதும் அவருக்கு நடந்த அவமரியாதை கொடுமையானது” என பதிவிட்டு இருக்கிறார். ரித்திகா சிங்கின் இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.