சென்னை: சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், ‘கழுகு’ சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் திரில்லர் டிராமா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 1990களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படத்தின் தலைப்பை விரைவில் படக்குழு அறிவிக்கிறது. ‘கழுகு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சத்யசிவா, 1990களில் நிஜமாக நடந்த சம்பவம்ஒன்றை அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாக்கப்படுகிறது.
1990 காலக்கட்டத்தில் நடக்கும் கதை என்பதால், அந்தக்காலத்தை திரையில் கச்சிதமாகக் கொண்டு வருவதற்காக படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 1990களின் காலக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், சென்ளையில் கிழக்கு கடற்கரை சாலையில் செட்டுகள் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது. சசிகுமார் ஹீரோவாக நடிக்க,‘ஜெய்பீம்’ படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் ஹீரோயினாக நடிக்கிறார்.
பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ‘பருத்தி வீரன்’ சரவணன், ‘கேஜிஎஃப்’ மாளவிகா, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழில் ஏராளமான படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள பாண்டியன் பரசுராம், முதல்முறையாக தனது விஜயகணபதி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.