திருவனந்தபுரம்: மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து பேஸ்புக் நேரலையில் அவதூறாக பேசிய நடிகர் விநாயகனுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விநாயகன். 1995ல் மாந்த்ரீகம் என்ற படத்தில் அறிமுகமான இவர், உடையோன் சிந்தாமணி கொலைக்கேஸ், சோட்டா மும்பை, கம்மட்டிப் பாடம் உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தன்னுடைய பேஸ்புக் நேரலையில் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அந்த வீடியோவில், ‘யார் இந்த உம்மன் சாண்டி?, அவர் செத்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?, என்னுடைய அப்பாவும் செத்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் செத்துவிட்டார். உம்மன் சாண்டி செத்ததற்காக எதற்கு 3 நாள் விடுமுறை விடுகின்றனர்? அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் நான் சொல்ல மாட்டேன்’ என்று உம்மன் சாண்டி குறித்து அந்த வீடியோவில் கூறினார். விநாயகனின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து அவர் தன்னுடைய பேஸ்புக்கில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டார்.