பெங்களூரு: கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான ‘கேஜிஎஃப்’ படத்தின் 2 பாகங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றதால், பான் இந்தியா ஸ்டார்களில் ஒருவராக மாறியிருக்கிறார். தற்போது அவர் நடிக்கும் ‘டாக்ஸிக்’ என்ற பன்மொழி படத்தை மலையாள நடிகை கீது மோகன்தாஸ் எழுதி இயக்கி வருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இது, அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. இதில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுபற்றிய ஒருவரது கேள்விக்கு பதிலளித்த யஷ், ‘இன்னும் எந்த விஷயமும் முடிவாகவில்லை. எனவே, இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார். இதனால் யஷ், ஷாருக்கான் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.