சென்னை: நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் கே.எம். இளஞ்செழியன் தயாரிப்பில், கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்தது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமராஜன் நடித்த ‘சாமானியன்’ மற்றும் இயக்குநர் சுசீந்திரன் தயாரித்த ‘மார்கழி திங்கள்’ போன்ற திரைப்படங்களில் நடித்த நக்ஷா சரண் கதையின் நாயகியாக நடிக்க, வையாபுரி, காளி வெங்கட் நடிக்க உள்ளனர்.
இவர்களுடன் ஷோபன் பாபு, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் நடிக்கின்றனர். ஒரு பெண் பைக் டாக்ஸி ஓட்டுனர் ஒரே நாளில் சந்திக்கும் ஆறு சுவாரஸ்யமான நபர்களைப் பற்றிய கதை இது. இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிறிய நாய்க்குட்டி ஒன்று இடம்பெறுகிறது. கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது மற்றும் லைசென்ஸ் படங்களை இயக்கிய கணபதி பாலமுருகன் எழுதி, இயக்குகிறார். ஏ.ஆர்.ரெஹானா இசையமைக்கிறார். எம்.ஆர்.எம். ஜெய்சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.