பெங்களூரு: கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் கடந்த சில நாட்களுக்கு முன், சுதீப் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். ‘8 வருடத்துக்கு முன், நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க சுதீப்புக்கு, 9 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் அடுத்து பார்க்கலாம் என்று சொல்லி கால்ஷீட் தராமல் இழுத்தடித்து வருகிறார். அவரை போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளேன். என்னை ஏமாற்றியது போல் அவர் மற்றவர்களை ஏமாற்றி விடக்கூடாது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நிறைய வேதனைகளையும், அவமானங்களையும் அனுபவித்திருக்கிறேன்.
எனது பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அவரது வீட்டிற்கு வெளியே அல்லது படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மறியல் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது எம்.என்.குமாரிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுதீப் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், ‘என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறீர்கள். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள். இதற்காக எனக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.