நடிகர் தனுஷ் நடிக்கும் “கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
அப்போது படத்தின் படப்பிடிப்பில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் வெடிகுண்டு காட்சிகள், புலிகள் சரணாலயத்தில் பாம் பிளாஸ்ட் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக கடந்த 25ம் தேதி மத்தளம்பாறையில் பகுதியில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தினார். இந்நிலையில் முறையான ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் நிபந்தனையுடன் படப்பிடிப்பு நடத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இதனிடையே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.