சென்னை: மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, பல்லக் லால்வானி, ரோபோ சங்கர், முனீஷ்காந்த் நடித்த படம், ‘பார்ட்னர்’. இதில் யோகி பாபுவாக மாறி நடித்துள்ள ஹன்சிகா, அந்த அனுபவம் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் முன்புஇருந்ததைவிட இப்போது அதிக ஆரோக்கியத்துடனும், நிம்மதியுடனும் இருக்கிறேன். அதனால்தான் ஸ்லிம்மாக மாறியுள்ளேன். மற்றபடி எனது உடல் எடையைக் குறைக்க ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. திருமணத்துக்கு பிறகான என் வாழ்க்கை சந்தோஷமாக மாறியுள்ளது. கணவர் என்னை அன்புடனும், அதிக பாசத்துடனும் கவனித்துக்கொள்கிறார்.
இதுவரை பல மொழிகளில் 50 படங்களில் நடித்திருந்தாலும், இன்னமும் படம் தயாரிக்கும் தைரியம் எனக்கு வரவில்லை. அதுபோல், டைரக்ஷன் துறையில் ஈடுபடவும் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. நடிப்பு மட்டுமே போதும் என்று நினைக்கிறேன். அதுவே எனக்கு அதிக சந்தோஷத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புது விஷயத்தையாவது கற்றுக்கொள்கிறேன். ‘பார்ட்னர்’ படத்தில் யோகி பாபுவாக மாறி நடித்துள்ளேன். கதைப்படி விஞ்ஞானக் கோளாறு காரணமாக யோகி பாபு ஒரு அழகான பெண்ணாக மாறுகிறார். பிறகு அவர் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. அந்தப் பெண்ணாக நான் நடித்துள்ளேன்.
இதற்காக யோகி பாபுவின் மேனரிசங்களைக் கவனித்து, அவரைப்போல் பேசி நடித்துள்ளேன். இக்கதையை இயக்குனர் என்னிடம் விவரிக்கும்போது ஆச்சரியமாகவும், மிக வித்தியாசமாகவும் இருந்தது. இக்கதை அனைவருக்கும் பிடிக்கும். சில ஹீரோக்கள் பெண்களாக நடித்துள்ளனர். ஒரு ஹீரோயின் ஆணாக நடிப்பது நான்தான் என்று நினைக்கிறேன். இப்படி நடித்தது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க நான் காமெடி செய்துள்ளேன். ஒரு ஆணாக வாழ்வது சிரமமா, பெண்ணாக வாழ்வது சிரமமா என்று கேட்கின்றனர். இரண்டுமே சவாலானதுதான். ஆணாகப் பிறந்தால் என்ன செய்வீர்கள் என்கின்றனர். இந்த ஜென்மத்தில் நான் பெண்ணாகப் பிறந்தது குறித்து அதிகமான மகிழ்ச்சி. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.