திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(27). மண்பாண்ட கலைஞரான இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ரஜினியின் உருவபொம்மை சிலை செய்த இவர், அதனை ரஜினியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு, 1980-ம் ஆண்டில் உள்ள ரஜினியின் தோற்றத்தில் சிலை செய்து ரஜினியிடம் வாய்ஸ் மெசேஜ் மூலம் வாழ்த்து பெற்றார். தற்போது, ரஜினி நடித்துவரும் லால் சலாம் படத்தின் கதாபாத்திரமான மொய்தீன் பாய் உருவத்தை தத்ரூபமாக சிலையாக வடித்துள்ளார்.
இதுபற்றி ரஜினி ரஞ்சித் கூறியதாவது: மொய்தீன் பாய் சிலையை 2 அடி உயரத்தில் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தேன். இந்த களிமண் சிலையை ரஜினியிடம் நேரில் வழங்க உள்ளேன். மேலும், ரஜினியின் தாய், தந்தை மார்பளவு போட்டோ ஒன்று கிடைத்தது. அதை வைத்து முழு உருவ சிலை செய்து ரஜினியின் மனைவி லதாவிடம் வழங்கினேன். அந்த சிலை தற்போதும் தலைவர் வீட்டின் வரவேற்பறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.