சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, அரவிந்த்சாமி, சத்யராஜ், லால், மீனாட்சி சவுத்ரி, சின்னி ஜெயந்த், ரோபோ சங்கர் நடிப்பில் வெளியான படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து நடைபெற்ற விழாவில், கோகுலுக்கு ஐசரி கே.கணேஷ் தங்கச்சங்கிலி பரிசளித்தார். மேலும், தான் தயாரிக்கும் அடுத்த படத்தை கோகுல் இயக்குவதாக அறிவித்தார்.
அப்போது பேசிய இமான் அண்ணாச்சி, ‘ஆர்ஜே பாலாஜிக்கு அடுத்த விழாவில் ஒரு பட்டம் கொடுப்பேன்’ என்றார். இதையடுத்து பேசிய சின்னி ஜெயந்த், ‘படத்துக்குப் படம் மாறுபட்ட கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடிக்கும் ஆர்ஜே பாலாஜிக்கு ‘தென்னிந்திய ஆமிர்கான்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்’ என்றார்.
அதைக்கேட்டவுடன் அலறிய ஆர்ஜே பாலாஜி, ‘இப்படம் வெற்றி அடைந்ததில் அதிக மகிழ்ச்சி. அரவிந்த்சாமி கேரக்டரைப் பார்த்துவிட்டு, அவரைப்போல் ஒருவர் நம் வாழ்க்கையில் வரமாட்டாரா என்று பலர் கேட்டார்கள். இங்கு பேசிய சின்னி ஜெயந்த், ’சவுத் இண்டியன் ஆமிர்கான்’ என்று எனக்கு பட்டம் கொடுத்தார். அதைக்கேட்டு எனக்கு பயம் வந்துவிட்டது. ஆமிர்கான் மிகப்பெரிய லெஜெண்ட். அவருடன் என்னை ஒப்பிடவே முடியாது. எனவே, அந்த பட்டம் எனக்கு வேண்டாம். ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களில் நடித்தேன். விரைவில் நாங்கள் மீண்டும் இணைந்து ’எல்.கே.ஜி 2’, ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.