மலையாளத்தில் ‘காதல்: தி கோர்’ என்ற படத்தை தயாரித்து, அதில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் மம்மூட்டி நடித்து அசத்தியிருந்தார். அதுபோல் ஒரு படத்தில், மம்மூட்டி நடித்திருந்த கேரக்டரில் பாலிவுட் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று தனக்கு தோன்றவில்லை என்று, பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தேசிய விருது பெற்றவருமான வித்யா பாலன் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘கேரளாவில் கல்வியறிவு அதிகம் கொண்ட ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சமூகத்தைப் பிரதிபலிக்கும் விஷயங்களைச் செய்வது அங்கு மிகவும் எளிதாக இருக்கலாம். தென்னிந்திய ரசிகர்கள் ஆண் சூப்பர் ஸ்டார்களை மட்டும் பெரிதும் கொண்டாடுகின்றனர். அப்படி இருக்கும்போது, மம்மூட்டி மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. ‘காதல்: தி கோர்’ படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி, படத்தை அவரே தயாரித்துள்ளார். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆதரவோ, அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையோ இச்சமூகத்தில் பரவலாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதுபோல், ‘காதல்: தி கோர்’ போன்ற ஒரு படத்தில் பாலிவுட்டின் ‘கான்’ நடிகர்கள் நடிப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால், இன்றைய தலைமுறையினர் அக்கருத்தை உடைப்பார்கள் என்று நம்புகிறேன். உதாரணமாக, ‘ஷுப் மங்கள் ஜியாதா சாவ்தான்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா தன்பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் நடித்திருந்தார்’ என்றார்.