விஷால் நடிக்கும் பான் இந்தியா படம், ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதை முன்னிட்டு விஜய்யை நேரில் சந்தித்த ‘மார்க் ஆண்டனி’ படக்குழுவினர், டீசரை விஜய்க்கு காண்பித்தனர். அப்போது படக்குழுவினரையும், விஷாலையும் விஜய் மனம் திறந்து பாராட்டினார். அதற்கு விஷால் நன்றி தெரிவித்தபோது, ‘என் நண்பனுக்காக இதைக்கூட செய்ய மாட்டேனா’ என்று விஜய் சொன்னது, படக்குழுவினரை நெகிழச்செய்தது. இந்த சந்திப்பின்போது விஜய்க்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்தனர். விஷால் பூங்கொத்தை தவிர்த்து, விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதை அவரிடம் கொடுத்தார்.
பிறகு தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை, ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நிறைவேறுவதாக விஜய்யிடம் சொன்னார், விஷால். தொடர்ந்து திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், விஜய்க்கும் 2 கதைகள் தயார் செய்துள்ளதாகவும் விஷால் சொன்னபோது, ‘நீ வா நண்பா நான் இருக்கிறேன். சேர்த்து பயணிப்போம்’ என்று விஷாலிடம் சொல்லி, அவரை உற்சாகப்படுத்தினார் விஜய். அப்போது தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.