சென்னை, ஜூலை 11: தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறாராம். நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவர் தெலுங்கில் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘உப்பெனா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார். ‘ஹீரோவாக நடித்தபோதிலும் இதுபோல் வில்லன் வேடம் வரும்போது, அதில் நடிக்க விஜய் சேதுபதி ஆர்வம் காட்டுகிறார். அதற்கு காரணம், ஹீரோ, வில்லன் என அவர் கேரக்டர்களை பிரித்து பார்ப்பதில்லை என்பதுதான்’ என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.