சென்னை: சினிமாவிலிருந்து விலகும் எண்ணம் துளியும் இல்லை என்றார் காஜல் அகர்வால். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலவுவை காஜல் அகர்வால் மணந்தார். அதன் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இப்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், கருங்காப்பியம் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு அவர் சினிமாவிலிருந்து விலக உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியது: சினிமாவிலிருந்து நான் விலகப்போவதாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி. இதுபோல் நான் எங்கும் சொல்லவில்லை. அப்படியொரு முடிவும் எடுக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகு அவனை வளர்க்கும் பணிகளில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். அதற்காக குடும்பத்துக்கு அதிக நேரம் ஒதுக்குகிறேன். இதையெல்லாம் வைத்து நடிப்பிலிருந்து முழுக்கு போடுவதாக சொல்வது எப்படி நியாயம்? என்னை பொறுத்தவரை எனது வேலை வேறு. குடும்பம் வேறு. இரண்டுமே எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். புதிய கதைகளையும் கேட்டு வருகிறேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.