சென்னை: சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடித்த ஜெய் பீம் படத்துக்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை. ஜெய் பீம் படத்திற்காக இயக்குனர் த.செ.ஞானவேலுவுக்கும் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டதாகத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். திரைப் பிரபலங்களும் வருத்தமடைந்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் நானி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது’ என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ஜெய்பீம் என்ற ஹேஷ்டேக் குறிப்பிட்டு இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ‘ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல், அவர்களுக்கு (ஒன்றிய அரசுக்கு) நடுக்கத்தை ஏற்படுத்தியதா?’ என அவரது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் கூறும்போது, ‘காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?’ எனக் கேட்டிருக்கிறார்.