ஐதராபாத்: ‘மகாநடி’ படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கியுள்ள சயின்ஸ் பிக்ஷன் பான் இந்தியா படம், `கல்கி 2898 ஏடி’. சுமார் ரூ600 கோடி செலவில் உருவாகியுள்ள இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் நடித்துள்ளனர். வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளார். தவிர, பிரபாசுக்கு உதவும் புஜ்ஜி என்ற ரோபோ கார் நடித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி, கி.பி 2898ம் ஆண்டில் முடிகிறது, சுமார் 6,000 ஆண்டுகள் நடக்கும் கதை இது என்று கூறப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் இப்படத்துக்கு ஒரு நாளில் 6 காட்சிகள் திரையிட அனுமதியும், பட்ஜெட் கருதி இப்படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதியும் கேட்டு வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தெலங்கானா அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக்கொண்ட தெலங்கானா அரசு, இப்படம் வெளியாகும் தேதியில் இருந்து தொடர்ந்து 8 நாட்களுக்கு (ஜூன் 27 முதல் ஜூலை 4ம் தேதி வரை) பிரத்தியேகமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. முதல் நாள் மட்டும் அதிகாலை 5.30 மணி காட்சிக்கு அனுமதி அளித்து, 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரில் ரூ75 வரை டிக்கெட் விலையை உயர்த்தவும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ100 வரை டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி அளித்துள்ளது. இதனால், ரூ265 முதல் ரூ495 வரை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.