சென்னை: தமிழில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் நடித்துள்ள ‘கோட்’ என்கிற ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம், வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘அந்தகன்’ என்ற படம், வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்துக்கு அடுத்தடுத்து 2 படங்கள் திரைக்கு வருகிறது. இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் ஹிட்டாகி வசூலில் சாதனை படைத்த ‘அந்தாதுன்’ என்ற படமே தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டார் மூவிஸ் சார்பில் பிரீத்தி தியாகராஜன் வழங்க, சாந்தி தியாகராஜன் தயாரித்துள்ளார். நடிகர் தியாகராஜன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். ஸ்ரீராம் ராகவன் எழுதியுள்ள கதைக்கு பட்டுக் கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக பிரசாந்த் நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவி குமார், வனிதா விஜயகுமார் நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.