சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கும் தமிழ்ப் படம், ‘நேசிப்பாயா’. இதில், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அதற்கான விழாவில் ஆகாஷ் முரளியை அறிமுகம் செய்த நயன்தாரா பேசும்போது, ‘நான் பொதுவாக எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டேன். இந்த விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். காரணம், இது என் அபிமான இயக்குனர் விஷ்ணுவர்தன், என் நெருங்கிய தோழி அனு வர்தனின் படம். கிட்டத்தட்ட இது ஒரு குடும்பப் படம் போலத்தான். அதனால்தான் விழாவுக்கு வர முடியாது என்று ‘நோ’ சொல்லவில்லை. விஷ்ணுவர்தன் நல்ல டைரக்டர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையான காதல் கதை கொண்ட படமாக உருவாகும் ‘நேசிப்பாயா’ வெற்றிபெற்று, ஆகாஷ் முரளி வெற்றிகரமான ஹீரோவாக வலம் வர வாழ்த்துகிறேன். ஹீரோயினாக நடிக்கும் அதிதி ஷங்கருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ, சினேகா பிரிட்டோ இணைந்து தயாரிக்கின்றனர். விஷ்ணுவர்தன், நீலன் சேகர் திரைக்கதை எழுதுகின்றனர். கேமரூன் எரிக் பிரைசன், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கின்றனர். பா.விஜய், ஆதேஷ்கிருஷ்ணா பாடல் கள் எழுதுகின்றனர்.