திருவனந்தபுரம்: கடந்த 2008ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘முல்ல’ என்ற படத்தில் அறிமுகமான மீரா நந்தன் (33), அதை தொடர்ந்து ‘கரன்சி’, ‘புதிய முகம்’, ‘கேரளா கபே’, ‘சீனியர்ஸ்’, ‘மல்லுசிங்’ உள்பட பல படங்களில் நடித்தார். பிறகு தமிழில் ‘வால்மீகி’, ‘அய்யனார்’, ‘காதலுக்கு மரணமில்லை’, ‘சூரிய நகரம்’, ‘சண்டமாருதம்’, ‘நேர்முகம்’ ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
அவருக்கும், லண்டன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கணக்காளர் ஸ்ரீஜுவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்ட மீரா நந்தன் துபாயில் குடியேறி, எஃப்.எம் ரேடியோ ஒன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் குருவாயூர் கோயிலில் மீரா நந்தன், ஸ்ரீஜு திருமணம் நடந்தது. இதில் இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர். திருமண போட்டோக்களை மீரா நந்தன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.