மும்பை: சூர்யா, ஜான்வி கபூர் நடிப்பதாக இருந்த ‘கர்ணா’ என்ற இந்தி படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. ஆமிர் கான் நடித்துள்ள ‘ரங்தே பசந்தி’ என்ற படத்தை இயக்கியவர், ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவர், மகாபாரத கதாபாத்திரமான கர்ணனை அடிப்படையாகக் கொண்டு ‘கர்ணா’ என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். இதில் கர்ணனாக நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். ஜான்வி கபூர் திரவுபதியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், ‘கர்ணா’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக படக்குழுவினர் 15 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். எக்ஸெல் எண்டர்டெயின்மெண்ட் அதிக பொருட்செலவில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படம், சூர்யாவின் முதல் நேரடி இந்திப் படம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதில் பாலிவுட் நடிகர்கள் அலி ஃபசல், விஜய் வர்மா, அவினாஷ் திவாரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இப்படம் தற்போது கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பாலிவுட்டில் ஒரு தகவல் பரவிஇருக்கிறது.