சென்னை: நடிகை, தயாரிப்பாளர், பாடகி என்று பிசியாக இயங்கி வரும் மம்தா மோகன்தாஸ் (40), சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தன் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், தற்போது பதிவிட்டுள்ள ஒரு போட்டோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அந்த போட்டோவில், தனது கையில் தோல் நிறம் மாறி, சில பகுதிகளில் சாக்லெட் நிறத்திலும், வேறு சில பகுதிகளில் வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், ‘விட்டிலிகோ’ (தோல் நிறம் இழத்தல்) என்ற அரியவகை நோய் பாதிப்பு. மம்தா மோகன்தாசுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி ‘வேர்ல்ட் விட்டிலிகோ டே’ அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தையொட்டி மம்தா மோகன்தாஸ் போட்டோவை பதிவிட்டார். உடலிலுள்ள நிறமி செல்கள் இறந்தாலோ அல்லது அதன் செயல்பாடுதடைபட்டாலோ விட்டிலிகோ நோய் ஏற்படும். இது பரவக் கூடிய ஒரு நோய் இல்லை என்றும், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.