சென்னை: தமிழிலும், தெலுங்கிலும் இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர் தயாரித்துள்ள படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. எஸ்.டி.விஜய் மில்டன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படம் இம்மாதம் வெளியாகிறது. இதையொட்டி நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் சசி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது ஜி.தனஞ்செயன் பேசும்போது, ‘ஒருவரின் கடந்த காலம், இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கும்’ என்றார். விஜய் ஆண்டனி பேசுகையில், ‘நான் விஜய் மில்டனுடன் சேர்ந்து பணியாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் நடித்த படங்களிலேயே பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, டாலி தனஞ்செயா போன்ற சீனியர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இசை, கேமரா உள்பட எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். ‘கெட்டவனை யாரும் அழிக்கக்கூடாது. கெட்டதைத்தான் அழிக்க வேண்டும்’ என்று விஜய் மில்டன் சொன்ன விஷயம் எனக்குப் பிடித்ததால் நடித்தேன்’ என்றார்.