சீனியர் எழுத்தாளரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான டி.என்.பாலு, தமிழில் ‘தெய்வத்தாய்’, ‘ஆசை முகம்’, ‘இரவும் பகலும்’, ‘அதே கண்கள்’ உள்பட பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ‘நல்லதுக்கு காலமில்லை’, ‘ஓடி விளையாடு தாத்தா’, ‘மூன்றெழுத்து’, ‘பூக்காரி’, ‘அஞ்சல் பெட்டி 520’, ‘சட்டம் என் கையில்’, ‘சங்கர்லால்’ உள்பட பல படங்களை இயக்கி தயாரித்துள்ளார். இந்நிலையில், அவரது மகள் கவிதா இயக்கியுள்ள ‘ஆதாரம்’ என்ற படத்தில் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர்.
இதுகுறித்து கவிதா கூறுகையில், ‘இது நான் இயக்கும் முதல் படம். என் தந்தை டி.என்.பாலு திரையுலகில் ஆளுமையுடன் இருந்தபோது யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது இயக்குனர் மிஷ்கின் போன்றவர்கள் என் தந்தைக்காக எனக்கு உதவி செய்துள்ளனர். இந்தப் பெருமை ஒன்றே எங்களுக்குப் போதும். எப்போதும் பழையதை மறக்காதீர்கள். புதுப்பித்துக்கொண்டே இருங்கள். ‘ஆதாரம்’ படம் சிசிடிவி கேமராவைப் பற்றியது இல்லை. கேமராவில் பதிந்த ஒரு விஷயத்தை மறைத்தது பற்றியது’ என்றார்.