சென்னை: விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படத்தை முதல்முறையாக இயக்கியுள்ளார். மேலும் ஸ்கிரிப்ட் எழுதி, இசை அமைத்து, எடிட்டிங் செய்து ஹீரோவாக நடித்து, மனைவி பாத்திமாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சிக்கான ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் மலேசியாவிலுள்ள லங்கா தீவில் நடந்தபோது, கடலில் ஜெட் போட்டை அதிவேகமாக ஓட்டிச்சென்ற விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண் கேமரா வைத்திருந்த படகின் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சுயநினைவு இழந்தார். கடந்த ஜனவரி மாட்டுப்பொங்கல் அன்று விபத்து நடந்தது. மலேசியாவில் தீவிர சிகிச்சை பெற்ற விஜய் ஆண்டனியை சென்னைக்கு அழைத்து வந்து, ஜனவரி 19ம் தேதி முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர், சென்னையில் நடந்த ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் பிரஸ்மீட்டில், விபத்துக்குப் பிறகு முதல்முறையாக மேடையில் தோன்றினார்.
அப்போது அவர் உருக்கமாகப் பேசியதாவது: ஷூட்டிங் போட்டின் மீது எனது போட் மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து கடலில் மூழ்கினேன். என் முகம், மூக்கு, தாடையின் உள்பகுதி உடைந்து, நடுக்கடலில் மயங்கி விழுந்தேன். சுயநினைவு இல்லாமல் கடலுக்குள் மூழ்கி உயிருக்குப் போராடிய என்னை காவ்யா தாப்பரும், அசிஸ்டெண்ட் கேமராமேன் ஒருவரும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். நான் மறுபிறவி எடுத்து இங்கு வந்து பேசுவதற்கு அவர்கள்தான் காரணம். எனக்கு நீச்சல் தெரியாது. காவ்யா தாப்பருக்கு நீச்சல் தெரியும். அதனால், துணிச்சலுடன் கடலில் குதித்து என்னைக் காப்பாற்றினார். பான் இந்தியா படமான ‘பிச்சைக்காரன் 2’, வரும் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது.