மும்பை: மலையாளம் உள்பட பல மொழிகளில் உருவாகியுள்ள படம், ‘தி கோட் லைஃப்’. தேசிய விருது பெற்ற பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காக பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.
பல தலைமுறைகளாக இருக்கும் அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்க முடியும். இப்போது அவர்களுக்கு இதுபோன்ற கருவிகள் இருப்பதால், அவர்கள் பல ஆண்டுகளுக்கு அதுகுறித்து படிக்க வேண்டிய தேவை இருக்காது. ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலைகளைப் பறிக்காமல், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும், அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நினைக்கிறேன்.
தலைவர்களாகவும், வேலை வழங்குபவர் களாகவும், யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் அதிகமான கவனத்துடன் இருக்க வேண்டும். நேரம் தேவைப்படும் விஷயங்களில், வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். கலையில் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதன் பயணத்தை கற்பனை செய்வது இப்போது எளிதானது. நீங்கள் அதை வேறொரு தளத்துக்கு கொண்டு செல்லலாம். நாம் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைக்கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது.