சென்னை: வெற்றிமாறனின் கதையை அமீர் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘இறைவன் மிகப்பெரியவன்’ என பெயரிட்டுள்ளனர். இதில் அசார், மொகைதீன் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’, கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ ஆகிய 3 படங்களிலும் சமூகத்துக்கு தேவையான கருத்து இருக்கும் என தயாரிப்பாளர் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதீக் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியது: ‘இறைவன் மிகப்பெரியவன்’, இந்து-முஸ்லிம் கதையா, சர்ச்சையான விஷயம் ஏதாவது உண்டா என்றெல்லாம் நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். இது முழுக்க முழுக்க நல்ல கருத்தை சொல்லும் படம். சமூகத்துக்கு தேவையான விஷயங்கள்தான் இதில் பேசப்படும். இதற்கு மேல் இந்த படம் பற்றி அமீர் அண்ணன்தான் சொல்வார். அவர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
இந்த படத்துடன் நான் தயாரித்து வரும் ‘மங்கை’, ‘இந்திரா’ படங்களிலும் நல்ல கருத்துகள் இருக்கும். அமீர் நடிக்கும் ‘மாயவலை’ படத்தை இணை தயாரிப்பு செய்கிறேன். முதல் படம் வெளியாவதற்கு முன்பே 4 படங்களை தயாரிப்பது கடினமாக இல்லை. சந்தோஷமாக இருக்கிறது. ஓட்டல் வியாபாரத்தை செய்து வந்த நான், சினிமாவின் மீது இருக்கும் பற்று காரணமாகவே கோலிவுட்டுக்கு வந்திருக்கிறேன். மற்ற தொழில்களில் ஜெயித்தது போல், சினிமாவிலும் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்காகவே நல்ல தரமான படங்களை தயாரிக்க முடிவு செய்தேன். அதே சமயம், இந்த படங்களில் நல்ல விஷயங்களையும் மக்களுக்கு சொல்ல வேண்டும் என விரும்பினேன். அது எனது படங்களின் டைரக்டர்கள் மூலம் நிறைவேறப்போகிறது.