சென்னை: நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் சுகுமாரன் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவரது இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிஃபர்’, ‘ப்ரோ டாடி’ ஆகிய படங்கள் வெற்றியைப்பெற்றுள்ளன. தற்போது மோகன் லால் நடிப்பில் ‘லூசிஃபர் 2: எம்புரான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக ‘டைசன்’ என்ற பான் இந்தியா படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்க உள்ளார். சோஷியல் திரில்லர் படமாக உருவாகும் இதற்கு முரளி கோபி திரைக்கதை எழுதுகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சில மலையாளப் படங்களில் அனிருத் பாடியிருந்தாலும், நேரடியாக மலையாளப் படத்துக்கு அவர் இசை அமைப்பது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அனிருத், தெலுங்கில்
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் ‘தேவரா’ என்ற படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.