மும்பை: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்திய கொடூர சம்பவத்துக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்திய ஒரு கும்பல், அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றது. பிறகு ஒரு பெண்ணை வயல்வெளியில் பலாத்காரம் செய்தது. இந்த மிருகத்தனமான சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர், நடிகைகள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: அக்ஷய் குமார்: மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு வன்மையான கண்டனங்கள். இந்த கொடும் செயலில் ஈடுபட்ட அத்தனை பேரையும் தயவு தாட்சணை இல்லாமல் தண்டிக்க வேண்டும். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்டோரை நாட்டை ஆள்பவர்கள் சும்மா விடக்கூடாது. கியரா அத்வானி: அந்த பெண்களை நினைத்து அழுதுகொண்டிருக்கிறேன். மறுபுறம் மிருகங்களை விட கேவலமான மனிதர்களை நினைத்து ஆவேசத்தில் இருக்கிறேன். மன்னிக்கவே முடியாத குற்றம் இது.
கொடூர செயல் செய்தவர்களை சட்டம் தண்டனை தர வேண்டும். ரிதேஷ் தேஷ்முக்: என்னால் காலை உணவு உண்ண முடியவில்லை. எப்படி மனிதர்கள் மிருகங்களை விட கேவலமாக நடந்து கொள்ள முடியும்? எப்போது மனிதர்களை சக மனிதனாக பார்க்கும் நிலை இல்லாமல்போகுமோ, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என ஏளனம் பெருகுமோ அப்போது கடவுள் பூமிக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும். பூமி பட்னாகர்: மிருகங்களுடன் அவர்களை ஒப்பிட வேண்டாம். மிருகங்கள் நன்றியுள்ளவை. இந்த கொடூர காரியத்தில் ஈடுபட்ட அத்தனை பேரின் அந்த பகுதியை வெட்டிவிட வேண்டும். ஆண் திமிரில் அலைந்த அத்தனை பேரும் ஆண்மையற்றவர்களாக வாழ வேண்டும்.