ஒரு வீட்டில் தனது காதல் கணவர் அவிதேஜூடன் யாஷிகா ஆனந்த் வசித்து வருகிறார். 3 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தை அவர் நேரில் பார்த்துள்ளார். அந்த விபத்தில் பலியான கணவன், மனைவி தன்னைத்தேடி வருவதாகவும், தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகவும் சொல்கிறார். இந்த மனநலப் பிரச்னைக்கு தீவிர சிகிச்சையும் பெறுகிறார். இந்நிலையில், அவிதேஜ் தனது நண்பரின் துணையுடன், யாஷிகா ஆனந்துக்கு மாந்திரீக சிகிச்சை அளிக்க சாமியாரை தேடிச் செல்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் யாஷிகா ஆனந்தை தேடி, விபத்தில் இறந்த கணவன், மனைவி வருகின்றனர்.
இதையடுத்து யாஷிகா ஆனந்த் காணாமல் போகிறார். வீட்டுக்குள் அவிதேஜின் நண்பர் இறந்து கிடக்கிறார். அப்போது யாஷிகா ஆனந்தை தேடி போலீஸ் வருகிறது. இதெல்லாம் எப்படி நடந்தது என்பது மீதி கதை. பேய் படங்கள் சற்று குறைந்திருக்கும் நிலையில், ‘பேய் இருப்பது உண்மை. அதை நம்புங்கள்’ என்ற மெசேஜுடன் இப்படம் வந்துள்ளது. சில மனிதர்கள் தாங்கள் இறந்தது தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற புதிய தகவலையும் சொல்லி இருக்கின்றனர். வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர் எம்.ஜெனித் குமார், அதை நேர்த்தியான திரைக்கதையுடன் சொல்லத் தவறிவிட்டார்.
சில திருப்பங்கள் ஆச்சரியப்பட வைத்தாலும், ஒரு காட்சியில் கூட ஆடியன்சை பயமுறுத்தவில்லை. சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும், பிரபாகரன் மெய்யப்பனின் பின்னணி இசையும் பேய் திரில்லர் படத்துக்கான பங்களிப்பை வழங்கவில்லை. படம் முழுக்க யாஷிகா ஆனந்த் பயந்துகொண்டே இருக்கிறார். சில காட்சிகளில் பேய் முகம் காட்டுகிறார். மற்ற நடிகர்கள் எல்லாம் வந்து செல்கின்றனர். சீரியசாக காட்டப்படும் ஆஸ்பத்திரி காட்சிகள் சிரிப்பையே வரவழைக்கிறது. விதவிதமான பேய் படங்களில் இதுவும் ஒன்று.