சென்னை: ‘இரவின் நிழல்’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி உள்ள படம் ‘டீன்ஸ்’. கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். கீர்த்தனா பார்த்திபன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். இமான் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் 13 குழந்தைகள் நடிக்கிறார்கள். இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது ‘‘நான் கடந்த 34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன்.
வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். அதனால், ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ படங்களுக்குப் பிறகு இப்போது ‘டீன்ஸ்’ படத்தை இயக்கி உள்ளேன். ‘இரவின் நிழல்’ முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை கொடுத்தாலும், தயாரிப்பாளர்களுக்கு அதிகப் பணத்தை ஈட்டித் தரவில்லை.
ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க அதே தயாரிப்பாளர் முன்வந்தார். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன். இந்தப் படம் சோதனை முயற்சியாக இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார் பார்த்திபன்.