சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிபெற்றுள்ள படம், ‘மகாராஜா’. இதை ‘குரங்கு பொம்மை’ நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், தி ரூட் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்துள்ளனர். இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி உருக்கமாகப் பேசியதாவது: எனது 50வது படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. முதலில் கதை கேட்கும்போது அதிக பிரமிப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டது.
ஒவ்வொரு படத்துக்கு முன்பும் இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எனக்குள் எழும். கதை கேட்கும்போது, அது அட்ராக்ட் செய்யக்கூடிய விஷயங்கள் தெரியும். ஆனால், நடிக்கும்போது தெரியாது. எடிட்டர் அல்லது அவரது அசிஸ்டெண்ட் என்று கேட்டு தெரிந்துகொள்வேன். கேட்கும் ஒவ்வொன்றையும் வைத்து கற்பனை செய்ய முடியாது என்றாலும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.
இதற்கு முன்பு நான் நடித்து வெளியான சில படங்கள் சரியாக ஓடவில்லை. அப்போது ஒரு தியேட்டரில் பேனர் வைக்கும்போது, ‘விஜய் சேதுபதிக்கு பேனர் கட்டினால், இனி கூட்டம் வருமா என்ன?’ என்று சிலர் கேட்டுள்ளனர். இதுபோன்ற கேலியான கேள்விகள் என்னைச்சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. இதற்கு பதில் சொல்வதற்காக இப்படத்தில் நான் நடிக்கவில்லை.
அப்படி நடித்தால் அந்தப் படம் உருப்படாது. என்னை சுற்றியுள்ளவர்களே இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். இப்போது அவர்களுக்கான பதிலாக ‘மகாராஜா’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதில் அதிக மகிழ்ச்சி. இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கும், தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்துக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார். மம்தா மோகன்தாஸ், சாச்சனா நேமிதாஸ், அருள்தாஸ், வினோத் சாகர், ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.