சென்னை: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் திரைக்கு வந்த ‘ராக்கி’, செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், தற்போது இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வரலாற்றுச் சம்பவங்களுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் நடித்துள்ளனர். சிறப்பு வேடம் ஒன்றில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி தனுஷ் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீ தனியா வந்தா தல மட்டும் உருளும். நீ படையா வந்தா சவ மழ குவியும்’ என்று தெரிவித்துள்ளார். இப்படம் 3 பாகங்களாக உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.