சென்னை: பாலாஜி முருக தாஸ், சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் நடிக்கும் திரில்லர் படம், ‘ஃபயர்’. திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜே.எஸ்.கே இயக்குனராக அறிமுகம்ஆகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘இன்று பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும், அவர்கள் எவ்வாறு அவற்றைக் கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசுகிறது. தொடர்ந்து சில தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் மிகவும் சகஜமாக நடமாடுகின்றனர்.
பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும், அவர்களை நமது சமூகம் வேறு மாதிரியே பார்க்கிறது. இந்நிலை மாறினால் மட்டுமே ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். இப்படி இருப்பது அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல என்ற கருத்தை படம் சொல்ல வருகிறது’ என்றார். ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படத்துக்கு எஸ்.கே.ஜீவா வசனம் எழுதுகிறார். டி.கே இசை அமைக்க, சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். மதுரகவி, ராவ் பாடல்கள் எழுதுகின்றனர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.