சென்னை: இளையராஜா பற்றி குற்றங்களோ குறைகளோ சொன்னால் அதன் விளைவுகளை நீங்கள் வேறு மாதிரியாக சந்திக்க நேரிடும் என வைரமுத்துவை எச்சரித்துள்ளார் கங்கை அமரன். இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எக்கோ நிறுவனமும் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி, ‘வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய வைரமுத்து, ‘இசையும் பாடல் வரிகளும் சேர்ந்துதான் நல்ல பாடலை உருவாக்க முடியும். சில சமயம், இசையை விட மொழிதான் தனித்து சிறந்து நிற்கும். இது புரிந்தவர்தான் ஞானி. புரியாதவர் அஞ்ஞானி’ என்றார். இளையராஜாவை அவர் மறைமுகமாக தாக்கிப் பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் இளையராஜாவின் சகோதரரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரன் பேசும்போது, ‘இளையராஜாவால் வளர்ந்தவர்தான் வைரமுத்து. அந்த நன்றி அவருக்கு இருந்திருக்க வேண்டும். கர்வம் காரணமாகவே இப்படி பேசியிருக்கிறார். இனிமேல் அவர் இளையராஜா பற்றி குற்றங்களோ குறைகளோ சொல்வதாக இருந்தால் அதன் விளைவுகள் வேறு மாதிரியாக சந்திக்க நேரிடும். அதனால் வாயை பொத்திக்கொண்டு இருங்கள்’ என்றார்.