சென்னை: விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இயக்குனரானவர், எழில். தொடர்ந்து அஜித் குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’, பிரபுதேவாவுடன் சரத்குமார் நடித்த ‘பெண்ணின் மனதை தொட்டு’, ஜெயம் ரவியுடன் பாவனா நடித்த தீபாவளி’, விமல் நடித்த ‘தேசிங்குராஜா’, விக்ரம் பிரபு நடித்த ‘வெள்ளக்காரதுரை’, விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்பட பல படங்களை இயக்கினார். தற்போது விமல் நடிக்கும் ‘தேசிங்குராஜா 2’ படத்தை இயக்கி வருகிறார். அவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, அவரது வெள்ளிவிழா ஆண்டை ‘தேசிங்குராஜா 2’ம் பாகத்தின் தயாரிப்பாளர் பி.ரவிச்சந்திரன் விழா நடத்தி கொண்டாடுகிறார்.
இதுகுறித்து எழில் கூறுகையில், ‘தீபாவளி’ படத்துக்குப் பிறகு பெரிய இடைவெளி ஏற்பட்டது. மக்களின் ரசனையும் மாறிவிட்டதால், உடனே காமெடி கதையின் பக்கம் கவனம் செலுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தயாரிப்பாளர்கள் என்னிடம் தொடர்ந்து காமெடி படம் இயக்கும்படி சொன்னார்கள். நானும் அதிகமான காமெடி படங்களை இயக்கினேன். தெலுங்கு மற்றும் கன்னடப் பட வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் மட்டும் போதும் என்று இருந்துவிட்டேன். எப்போதுமே நான் ஹீரோக்களுக்காக கதை எழுதுவது இல்லை. நான் எழுதிய கதைக்கு தேவையான ஹீரோவைத்தான் தேடுவேன்’ என்றார்.