லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2000ல் உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, 2002ல் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இமான் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடினார். பிறகு இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தன்னைவிட 10 வயது குறைந்த ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ராவுக்கு வாடகைத்தாய் மூலம் பிறந்த மால்டி என்ற மகள் இருக்கிறாள். பாலிவுட்டில் தன்னை பலர் புறக்கணிக்கப்பதாக தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோஹர் மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்திய பிரியங்கா சோப்ரா, குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறி, 2016 முதல் ஹாலிவுட் படம் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள அவர் அளித்திருக்கும் பேட்டி வருமாறு: ஹாலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களை இருண்ட காலம் என்பேன். அங்கு எனக்கு யாரையும் தெரியாது. தனியாகவே இருந்தேன். நியூயார்க் நகரம் என்னை பயமுறுத்தியது. எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கினேன். இந்திய முன்னணி பத்திரிகைகளில் எனது போட்டோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தேன். அமெரிக்காவில் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்க மாட்டார்கள். இதனால் முடங்கிவிட்டேன் என்றோ, அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டது என்றோ சொல்லவில்லை.
வழக்கமான பணிகளை அமைதியாக தொடர்ந்தேன். முன்னணி நடிகை என்று நினைக்காமல் வேலையில் கவனம் செலுத்தியதாலேயே உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.
எனது வாழ்க்கையில் அதிக லட்சியங்களும், நியாயமான கனவுகளும் நிறைந்திருக்கும். அதை நோக்கித்தான் வேகமாக ஓடுவேன். சில பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், சில நேரங்களில் தீர்வு கிடைக்காது. உடனடியாக அதை விட்டுவிடுவேன். அலைகளை எதிர்த்துப் போராடுவதற்கு பதிலாக, அதில் துணிச்சலுடன் சவாரி செய்ய வேண்டும் என்று நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.