லண்டனில் சொந்த மருத்துவமனை வைத்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி, பிளாஸ்டிக் சர்ஜரியில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். அவரது மனைவி புன்னகை பூ கீதா. பிரபல மாடல் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற வந்த இடத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு நெருக்கமாகிறார். அதன் விளைவு, அவர்கள் இருவரும் கட்டில் வரை தங்கள் காதலைக் கொண்டு செல்கின்றனர். அப்போது மது அருந்திய யாஷிகா ஆனந்த், மேலும் உற்சாகம் பொங்க வேண்டும் என்று மாத்திரை சாப்பிடுகிறார். இதனால் அவரது இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டு மரணம் அடைகிறார். அவரது சாவுக்கு காரணமாகி விட்ட ரிச்சர்ட் ரிஷி பதறுகிறார். அப்போது புன்னகை பூ கீதா தனது தோழிகள் சிலருடன் வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். இதனால், வீட்டிலுள்ள ஒரு பெட்டியில் யாஷிகா ஆனந்தின் சடலத்தை ரிச்சர்ட் ரிஷி மறைத்து வைக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை. வெளிநாட்டு ஸ்டைலிஷான டாக்டர் கேரக்டருக்கு ரிச்சர்ட் ரிஷி பொருத்தமாக இருக்கிறார். பெட்ரூமில் யாஷிகா ஆனந்திடம் எல்லை மீறி நெருக்கம் காட்டியிருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்து, இன்னொரு ரவுண்டு போகலாமா என்று கேட்டு யாஷிகா ஆனந்த் அதிர வைக்கிறார். கணவர் தன்னிடம் சகஜமாக இல்லை என்பது ஒருபுறம், குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மறுபுறம், யாஷிகா ஆனந்தின் கொலையை ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்த்து மறைக்கும் கொடூரம் என்று, கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்துள்ளார், தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா. கிளைமாக்ஸில் அவரது திடீர் அவதாரம் எதிர்பாராதது. மெதுவாக நகரும் காட்சிகள் சற்று சோர்வு ஏற்படுத்தினாலும், லண்டனில் நடக்கும் கதைக்களம் அதை மறக்கடித்து விடுகிறது. ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், காட்சிகளினூடே பயணித்திருக்கிறார். 4 பேர் இசை என்று சொல்கிறார்கள். இதுபோன்ற மர்டர் மிஸ்ட்ரி கதைக்கு இசையால் மிரட்டியிருக்க வேண்டாமா.